Wednesday 22 May 2019

 

மொழிபெயர்ப்பு   உத்திகள்

மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களைப் பொருள் மாறாமல் மற்றொரு மொழிக்கு அதாவது இலக்கு மொழிக்கு மாற்றுவது மொழிபெயர்ப்பாகும். முந்தைய காலத்தில் மொழியியலாளர்கள் குறிப்பாக மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பு   சுதந்திரமாகச் செயல்படுவது சரியா அல்லது சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கப்படுவது சரியா என குழப்பத்திற்குள்ளாகினர். அதில் அவர்கள் வாசகரின் பண்பு, பனுவல் வகை, மொழிபெயர்ப்பின் நோக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாது விவாதம் செய்ததால் ஒரு நிலையான முடிவிற்கு வர இயலவில்லை. அதன் பின்னரே, ஒரு நல்ல மொழிபெயர்ப்பு   மூலமொழி பனுவலின் வகை, மொழிபெயர்ப்பாளரின் கலைச்சொற்கள், பல மொழிபெயர்ப்பு   முறைகளைக் கொண்டு அமைய வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்தே மொழிபெயர்ப்பு  த் துறை வளர்ச்சி காண தொடங்கியது.

            பனுவலின் வகையின் அடிப்படையில் மொழிபெயர்ப்பதை கத்திரினா ரேஸிஸ் (1971) என்பவர் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி குறிப்பிடுகிறார். முதலில், தகவல் வகையை (Informative Text) மொழிபெயர்க்க வழிகளைப் பட்டியலிட்டுள்ளார். உண்மை தகவல், பொது அறிவு, கருத்துரைகள் கொண்டிருக்கும் பனுவல்கள் இவ்வகையைச் சேரும் என்கிறார். இவைத் தலைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அமைந்திருக்கும். மேலும், ஏரளமான மேற்கோள் கொண்ட கருத்துகளே இடம்பெற்றிருக்கும். பெரும்பாலும், நூலக ஆய்வாக அமையும் கட்டுரைகள் இவ்வகையில் சேரும். இவ்வகை பனுவல்கள் மொழிபெயர்க்கப்படும் பொழுது மூலமொழி பனுவல் முழுமையாக மொழிபெயர்க்கபட்டிருக்க வேண்டும். எவ்வித தகவல்களும் தவிர்க்கப்ட்டிருக்க கூடாது. தேவைப்படும் இடங்களில் விளக்கங்கள் தரப்படலாம். தொடர்ந்து, வெளிப்படையான வகை (Expressive Text) பனுவல்கள் உணர்வு அடிப்படையில் அமைந்திருக்கும். இவ்வகை பனுவல்களின் மொழிபெயர்ப்பில் எழுத்தாளருக்கும் பெறுநருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எழுத்தாளர் உணர்ந்த அல்லது உணர வைக்க முயற்சி செய்யும் உணர்வுகள் இலக்கு மொழி வாசகர்களையும் சென்றடைய வேண்டும். பெரும்பாலும், கவிதை படைப்புகள் இவ்வகை சார்ந்த பனுவலாகும்.

செயல்பாடு பனுவல் வகை என்பது (Operative Text) ஒருவரை ஒரு செயலைச் செய்யத் தூண்டும் வகையில் அமைந்திருக்கும். தொடர்பு கொள்ளும் பனுவல் எனலாம். பொதுவாக, விளம்பரங்கள் இவ்வாறு அமையும். விளம்பரங்களைப் பார்த்துக் கவரப்பட்டு பொருள்களை வாங்கும் பழக்கம் இன்றும் உள்ளது. மொழிபெயர்க்கப்பட்ட பனுவல் இலக்கு மொழி வாசகர்களையும் கவரும் வகையில் இடம்பெறுவதை மொழிபெயர்ப்பாளர் உறுதி செய்ய வேண்டும். ஒலி அமைவு (Audiomedial Text) பனுவல்கள் காட்சி, இசை போன்ற கூறுகளைக் கொண்டு இயங்கும். இப்பனுவல்கள் மொழிபெயர்க்கப்படும்போது இலக்கு மொழியின் பண்பாடு பழக்க வழக்கத்தில் இடம்பெறும் படங்களையும் இசையையும் கொண்டு அமைய வேண்டும்.

பொதுவான வகை பனுவல்களை இலகுவான வகையில் மொழிபெயர்க்கலாம். ஆனால், துறைசார் பனுவல்களைக் குறிப்பிட்ட வகைகளைக் கொண்டு மொழிப்பெயர்க்க முடியும். எடுத்துக்காட்டாக, சட்ட வகை பனுவல்களுக்குச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்புப் பயன்படுத்தப்படும். சட்டம் சார்ந்த சில சொற்களுக்கு இணையான நிகரன்கள் இல்லாத வேளையில் கடன் பெறுதல் நிகழும். அறிவியல், பொருளாதார பனுவல்களை மொழிபெயர்க்கும்போது துறைசார் சொற்களுக்கான நிகரன்கள் இல்லாவிடின் கடன் பெறுதலும் விளக்கம் தரும் தொடர்களோ வாக்கியங்களோ இணைத்து மொழிபெயர்ப்புச் செய்யப்படும். இவ்வாறு ஒவ்வொரு பனுவலுக்குப் பொருந்தும் வகையில் மொழிபெயர்ப்பு உத்திகள் அமைகின்றன.

எனவே, அனைத்து மொழிபெயர்ப்புகளும் ஒரே உத்தியைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கப்படுவதில்லை. நோக்கம், வாசகர் போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு மொழிபெயர்ப்புகள் செய்யப்படுகின்றன.

Friday 22 June 2018

பொருண்மையியல் 

முன்னுரை

பொருண்மையியல் என்பது சொற்களின் அல்லது தொடர்களின் பொருளைப் பற்றிய அறிவியல் ஆய்வு. இதில் சொல் அல்லது தொடரைப் பற்றிய பொருள், பொருண்மையியல் தன்மை, பொருள் பற்றிய பொது அறிவு போன்றவை அடக்கம். பொருண்மையியல் அடிப்படையில் பொருளைப் பற்றி பல கோணங்களில் ஆராயப்பட்டன. அதில் அகராதிப் பொருள், சூழல் பொருள் என்பது முதலில் இடம்பெறுகிறது. இவை ஒரே அணுகுமுறையில் ஆராயப்பட்டாலும் பொருண்மை அடிப்படையில் வேறுபடுகின்றன.

 

நேரடிப் பொருளும் சூழல் பொருளும்

நேரடிப் பொருள் என்பது ஒரு சொல் அல்லது தொடரின் உண்மை பொருளாகும். அச்சொல் வழக்கில் இடம்பெறும்போது மாற்றம் பெறாமல் ஒரே பொருளை அனைத்து இடங்களிலும் கொண்டு வரும். இதை அகராதிப் பொருள் என்றும் குறிப்பிடுவர். இதை Chaer (2009) ஐம்புலங்களின் துணையுடன் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதாகும் என்கிறார். அதற்கு எதிர்மறையானதே சூழல் பொருள் என்றும் அவர் வரையறை செய்கிறார்.

சூழல் பொருள் என்பது ஒரு சொல்லோ தொடரோ அது இடம்பெற்றிருக்கும் சூழலை அடிப்படையாகக் கொண்டு அதன் பொருள் கண்டறியப்படும். அச்சொற்கள் பிற சொற்களோடு இணைந்து ஒரு பனுவலில் இடம்பெறும்போதும் பயன்பாட்டுச் சூழலில் பயன்படுத்தப்படும்போதும் பொருள் வேறுபாடுகளை ஏற்கும். அவ்வாறு மாற்றம் காண்பவையைச் சூழல் பொருள் என்பர். இருப்பினும், பயன்படுத்தப்படும் சொல்லோ தொடரோ அவ்வாக்கியத்தில் பொருந்தி நிற்கும். அதற்கு மாறாக அமைந்தால் அது வாக்கியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். வாசகர்களை ஈர்க்க இது பெரிதளவில் பயன்படுத்தப்படுகிறது.

 

நேரடிப் பொருள், சூழல் பொருளின் வேற்றுமைகள்

நேரடிப் பொருளுக்கும் சூழல் பொருளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக அவற்றின் தன்மை, செயல்பாடு, பனுவல் வகை போன்றவை மாறுபடுகின்றன.

அவ்வகையில், நேரடிப் பொருள் வழங்கப்படும் சொல்லுக்கோ தொடருக்கோ எவ்வித உணர்ச்சியும் வெளிபடுத்தாமல் இடம்பெறும். எடுத்துக்காட்டாக, காடு எனும் சொல் இடப்பெயராக அமைகிறது. இது ஓர் இடத்தைக் காண்பிக்கின்றது. இதில் அதைச் சார்ந்த உணர்ச்சிகள் இல்லை மாறாக உள்ளவாறே அமைகிறது. ஆனால், சூழல் பொருள் தனக்கென ஓர் உணர்ச்சியை உடன் கொண்டு வரும். மேலும், அத்தொடர் அல்லது வாக்கியத்தில் மற்றொரு பொருளை உணர்த்தும். எடுத்துக்காட்டாக, அவனுக்கு தலைமுடி காடாய் வளர்ந்திருந்தது. இவ்விடத்தில் காடு எனும் சொல் அதிகமான எனும் பொருள் ஏற்று இடம்பெறுகிறது. இச்சொல் தனக்கென ஒரு பொருளை வாக்கியத்திற்கு ஏற்ப உணர வைக்கின்றது.

சூழல் பொருள் பதிலிடு முறையில் பயன்படும். அதாவது, வேறு பொருளைக் குறித்து வரும். ஆனால், அகராதிப் பொருள் சொல்லியல் முறையில் அகராதியில் இடம்பெறும் பொருளைக் குறிக்கும். மான் என்பது நான்கு கால்கள், கொம்புகள் கொண்ட ஒரு விலங்கினமாகும். இவ்வாறு உள்ளபடி உணர்த்துவது அகராதிப் பொருள். தொடரிலோ வாக்கியத்திலோ அமைந்துமான்போல் ஓடினாள்என்பது துள்ளிக் குதித்து எனும் பொருளை ஏற்று வரும். அவ்விடத்தில் மான் என்பதன் உருவம் மறைந்து அதன் தன்மை வெளிபடுகிறது. எனவே, மற்றொன்றின் பதிலாய் அமைகிறது.

தொடர்ந்து, அகராதிப் பொருள் தரும் சொற்களையோ தொடர்களையோ ஆய்வு அல்லது அறிவியல் கட்டுரைகள், அதிகாரப்பூர்வ பனுவல்களில் காணலாம். சூழல் பொருள்கள் பெரும்பாலும் இலக்கியங்களில் இடம்பெறும். இலக்கியங்கள் பொதுவாகவே எதையும் மிகைப்படுத்தியும் நயமாகவும் சொல்லும் திறன் வாய்ந்ததாக அமைய சூழல் பொருள்களே துணை நிற்கின்றன. அகராதியில் வேறு பொருளை உணர்த்தும் சொல் இலக்கியங்களில் வேறு பொருளைத் தரும். இதையே சூழலுக்கு ஏற்றவாறு பொருள் தருதல் எனலாம்.

ஆகவே, நேரடிப் பொருளும் சூழல் பொருளும் ஒரு சொல்லின் பொருளைக் குறித்து வந்தாலும் பொருளின் தன்மையில் மாற்றம் பெற்று விளங்குகின்றன. பனுவல் வகை, பயன்பாடு, உணர்வு தன்மை போன்றவற்றில் இவை வேறுபடுவது மட்டுமின்றி மற்ற சில கூறுகளாலும் மாற்றம் காண்கின்றன.

 

வேறுபாடுகள்